Friday, May 19, 2017

சுவாசத்தால் யுகங்களை கணித்த சித்தர்கள் !!!

சுவாசத்தால் யுகங்களை கணித்த சித்தர்கள் !!!


சித்திரைக்கும் சித்தர் பெருமக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று வரலாறு கூறுகிறது.

பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்தாலும், "வாசி' எனப்படும் சுவாசம் மூலமாக காலம் கணிக்கப்பட்டிருப்பதையும் சித்தர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

முக்காலமும் அறிந்த சித்தர் பெருமக்கள், நாளொன்றுக்கு நாம் சுவாசிக்கும் எண்ணிக்கையை வைத்தே காலத்தைக் கணித்திருக்கிறார்கள்.

இதயம் என்ற தாமரை வழியாக சுவாசம் போகும்போது, நான்கு அங்குலம் போக மீதி சரியாகத் திரும்பி வரும் போது சுவாசத்தைக் கணித்திருக்கிறார்கள்.

அது இருபத்தோராயிரத்து அறுநூறு முறை நடக்கிறது. அதுவே அறுபது நாழிகை கொண்ட ஒருநாள்.

நாழிகை ஒன்றுக்கு நம் சுவாசம் 360.

அறுபது நாழிகைக்கு- அதாவது ஒரு நாளைக்கு நம் சுவாசம் 21,600 முறையாகும். இதன்படி கணக்கிட்டுப் பார்த்த போது 360 நாள்- 21,600 நாழிகை கொண்டது என்றும், அதுவே ஒரு வருடம் என்றும் சித்தர் பெருமக்கள் கூறுகிறார்கள்.

இதேபோல் யுகங் களின் கணக்கும் இப்படி கூறப்படுகிறது. 21,600-ஐ எண்பதால் பெருக்கினால் கிருத யுகமாம். அறுபதால் பெருக்க திரேதா யுகமாம். நாற்பதால் பெருக்க துவாபர யுகமாம். இருபதால் பெருக்க கலியுக மொத்த ஆண்டாகும் எனப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு நம் சுவாசம் 21,600. ஒரு வருடத்தின் நாழிகை 21,600.

21,600 ஷ் 80 =17,28,000 கிருதயுகம்.

21,600 ஷ் 60 =12,96,000 திரேதாயுகம்.

21,600 ஷ் 40 =8,64,000 துவாபரயுகம்.

21,600 ஷ் 20 =4,32,000 கலியுகம்.

பஞ்சாங்கத்தில் பார்த்தால், மேற்படி யுகங்களுக்குரிய வருடங்கள் சரியாக இருப்பதைக் காணலாம்.

சித்தர்களின் ஆயுட்காலத்தைக் கணக்கிட முடியாது. அவர்களாக ஜீவசமாதி அடைந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.

இயற்கையுடன் இயைந்து வாழவேண்டு மென்பதை நினைவூட்டவே உலக சித்தர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், தற்கால நவீன விஞ்ஞான வளர்ச்சியாலும், ரசாயனக் கலவையாலும், நச்சுப்புகையாலும் இயற்கையான நிலை மாறிவருகிறதென்பதை யாரும் மறுக்கமுடியாது. வளரும் விஞ்ஞானத்தால் ஆதாயங்கள் பல பெற்றா லும் பாதகங்களும் உடல்நல பாதிப்பும் அதிகமாகவே காணப்படுகின்றன.

சித்தர்கள் ஆராய்ச்சிசெய்து வெளிப் படுத்தியதுதான் சித்தமருத்துவம். தவவலிமை, யோகா போன்ற ஒழுக்கம் நிறைந்த கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சித்தர்கள். பிற உயிரினங்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டபோது அதற்குரிய மூலிகைகளை தங்கள் ஞான சக்தியால் கண்டு, அந்த நோய்களுக்கு மருந்தாக அளித்திருக்கிறார்கள். ஓலைச்சுவடிகளில் பதித்திருக்கிறார்கள். இன்றும் மூலிகைகளைக்கொண்ட மருத்துவத்திற்கு தனிமதிப்பு உண்டு. பக்கவிளைவுகளின்றி மூலிகைகளைக் கையாண்டு பல நோய்களுக்கு சித்தர்கள் நிவாரணம் கண்டிருக்கிறார்கள்.

கூடுவிட்டுக் கூடுபாய்வது, ஆகாயத்தில் பறப்பது, மருத்துவம், ஜாலம், பூஜாவிதி, ஜோதிடம், சிமிழ்வித்தை, சூத்திரம், சிற்பநூல், மாந்திரீகம், சூட்சும ஞானம், தீட்சாவிதி, யோகஞானம், திருமந்திரம், ரசவாதக்கலை போன்றவையெல்லாம் சித்தர்களுக்கு கைவந்த கலையாகும். ஒரேசமயத்தில் நான்கு இடங்களில் காட்சிதந்த சித்தர்களும் உண்டு. அதேபோல் இரண்டு மூன்று இடங்களில் சமாதியான சித்தர்பெருமக்களும் உண்டு.

சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் பெரும்பாலும் கோவில்கள் அமைந்துள்ளன. அவை இன்றளவும் புகழ்பெற்றுத் திகழ் கின்றன. மேலும் சித்தர்கள் ஜீவசமாதியான இடத்திற்குச் சென்று வழிபட்டால் நமது துன்பங்களுக்கு நல்ல நிவாரணம் கிட்டும். கோவில்கள் மட்டுமல்ல; சித்தர்கள் அருளும் சமாதிகளும் தோஷங்கள் நிவர்த்திசெய்யும் தலங்களாகப் போற்றப்படுகின்றன.

நவகிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர் அழுகணிச் சித்தர். இவரை வழிபட்டால் நாகதோஷம் அகலும். இவர் சித்தியடைந்த இடம் நாகப்பட்டினம். இவரைப்போலவே குதம்பை சித்தர் கேது தோஷம் நீக்கும் சக்திபெற்றவர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், "டென்ஷன்' பேர்வழிகளும் இவரை வழிபட்டு நலம்பெறு கிறார்கள். இவர் சித்தியடைந்த இடம் மயிலாடுதுறை. ராகு பகவானைப் பிரதிபலிக் கும் பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது சிறுகனூர் திருப்பட்டூர் தலம். இங்குள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மன் சந்நிதிக்கு வலப்புறம் ஆதிசேஷன் அவதாரமான பதஞ்சலி முனிவரின் சமாதி உள்ளது. அங்கு சிறிதுநேரம் அமர்ந்து தியானம் செய்தால் கேதுவினால் ஏற்படும் தோஷம் மட்டுமல்ல; அனைத்து நாகதோஷங்களும் நீங்குமென்பர். இந்தக் கோவிலுக்கு வடபுறத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. அதன் புறவாசலின் முன்பகுதியில் புலிக்கால் முனிவர் என்னும் வியாக்ரபாத முனிவரின் பிருந்தாவனம் உள்ளது. அவரை பிரார்த்தனை செய்து வழிபட்டால் ராகுதோஷம் நீங்கும்.

சித்தர்களுக்கெல்லாம் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும் "குறுமுனி' என்று போற்றப்படும் அகத்தியர், கயிலை மலையில் நடந்த சிவ- பார்வதி திருமணக்காட்சியை பொதிகை மலையிலிருந்தவாறு தரிசித்தவர். இவர் ஒருசமயம் திருக்குற்றாலத்திற்குச் சென்றபோது அங்கு அமைந்துள்ள வைணவத் திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது அவ்வாலயத்திலிருந்தவர்கள், சிவச்சின்னங்களுடன் வந்த அகத்தியரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. திரும்பிச்சென்ற அகத்தியர் வைணவச் சின்னங்களை தரித்துக்கொண்டு, சில மூலிகைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் பெருமாள் ஆலயம் வந்தார். வைணவர் என்றெண்ணி அவரை அனுமதித்தனர்.

உள்ளே சென்ற அகத்தியர் மூலிகைச் சாறை பெருமாள் தலையில் பிழிந்து, கைவைத்து அழுத்தி, "குறுகுக குறுகுக' என்றாராம். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பெருமாள் குறுகி சிவலிங்கமானாராம். அவரே குற்றாலீஸ்வரர்.

அகத்தியர், பெருமாள் தலையில் கைவைத்து அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளை இன்றும் குற்றாலநாதர் சிவலிங்கத்தில் தரிசிக்கலாம். அதுமட்டுமல்ல; அகத்தியர் தன் வலிமையைப் பயன் படுத்தி அழுத்தியதால் குற்றாலநாதருக்கு தலைவலி ஏற்பட்டதாம். அதனை நீக்குவதற்கு அரிய மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட தைலத்தை இன்றும் அபிஷேகம் செய்கிறார்கள். அகத்தியர் குற்றாலத்திற்கு வந்ததன் அடையாளமாக அவருக்கு ஒரு சந்நிதி, குற்றாலநாதர் கோவிலில் உள்ளது. அவரை வழிபட, நினைத்த காரியங்கள் வெற்றி பெறுமென்பது நம்பிக்கை. அகத்தியர், திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் வளாகத்தில் சமாதி அடைந்தாரென்றும், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் திருக்கோவிலில் சமாதிகொண்டதாகவும் இருவகையாக சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் பொதிகை மலைப்பகுதியில் இன்றும் அகத்தியர் வாழ்ந்துவருகிறார் என்று கூறுவர். மக்கள் நடமாட்டமில்லாத பொதிகை மலைப்பகுதியில் அகத்தியருக்கு முழு உருவச் சிலையொன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா பௌர்ணமியன்று இரவில், ஒருசில பகுதிகளில் பூமியிலிருந்து ஒருவகை உப்புவெளிப்படும். இதை "பூமிநாதம்' என்று சொல்வர். இந்த உப்பு, சித்தமருத்துவத் துறையில் முக்கிய இடத்தைப் பெறும். இது மூலிகையிலுள்ள ஜீவசக்திகள் வீரியத்துடன் விளங்க உதவுகிறது. இந்த உப்பு, சித்ரா பௌர்ணமியன்று வெளிப்படுவதை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் சித்தர் பெருமக்களே. சித்ரா பௌர்ணமி ஆதியில் சித்தர் பௌர்ணமி எனப்பட்டது. மனித குலம் ஆரோக்கியமாக வாழ்வதற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் சித்தர்கள். சித்ரா பௌர்ணமியின் உண்மையையும் சக்தியையும் கண்டு, மனித குலம் நலமுடன் வாழ வெளிப்படுத்தியவர்கள் சித்த புருஷர்கள் என்று வரலாறு கூறுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல; உலகமெங்கும் சித்தர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் நம் நாட்டில் காட்சிதரும் சித்தர்களைப்போல் ஜடாமுடி, தாடியுடன் காட்சிதருவதில்லை. ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும், தாய்லாந்திலும், மற்ற நாடுகளிலும் சித்தர்கள் வாழ்கிறார்கள். யோகா, தியானம், வான் ஆராய்ச்சி போன்றவையெல்லாம் அவர்களுக்கு கைவந்த கலை. அவர்களை அடையாளம் கண்டு அங்கு வாழும் மக்கள் போற்றுகிறார்கள்.

சித்தர்கள் காலத்தின் கணக்கை கணித்ததுபோல, நவகிரகங்களின் திசை களையும் மாற்றி, காலநிலைகளையும் மாற்றியிருப்பதாக வரலாறு கூறுகிறது. நாட்டில் மழையின்றி மக்கள் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் காலகட்டத்தில், இடைக் காடர் என்ற சித்தர் மட்டும் பசியின்றி வாழ்ந்து வந்தார். இதைக்கண்ட நவகிரக நாயகர்கள் "இது எவ்வகையில் சாத்தியம்?' என்று வியந்து, காரணத்தையறிய சித்தரின் குடில் தேடிவந்தனர். அவர்களை அன்புடன் வரவேற்ற இடைக்காடர் அவர்களுக்கு வரகு ரொட்டியையும் ஆட்டுப்பாலையும் அளித்தார். அவர்களும் விருப்பமுடன் உண்டனர். ஆட்டுப்பாலில் எருக்கிலைகளின் சத்து மிகுந்திருந்ததால், அப்பாலை அருந்தியதும் நவகிரக நாயகர்கள் மயக்கமுற்று சாய்ந்தனர். உடனே இடைக் காட்டு சித்தர், நவகிரக நாயகர்கள் எந்த அமைப்பிலிருந்தால் மழை குறையின்றிப் பெய்யுமோ, அந்த அமைப்பில் மாற்றிப் படுக்க வைத்தார். வானத்தில் மேகமூட்டம் திரண்டது. மழைபொழியத் துவங்கியது. பூமி குளிர்ந்தது. ஆறு, குளங்கள் நிரம்பி வழிந்தன. மயக்க நிலை தெளிந்த நவகிரக நாயகர்கள், தங்களை திசைமாற்றி இடைக்காடர் சாதித்துவிட்டதை அறிந்து வியந்தார்கள். நாடு செழிக்க சித்தர் செய்த அற்புதத்தை நினைத்து அவரைப் போற்றினார்கள்.

அவரை வணங்கி, வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இதேபோல, ஒவ்வொரு சித்தரும் பல கலைகளில் நிபுணத்துவம் பெற்று மக்கள் நலமுடன் வாழ அருள்புரிந்திருப்பதாக சித்தர்களின் வரலாறு கூறுகிறது. எனவே சித்தர் பெருமக்கள் சமாதியடைந்த திருத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு நலமுடன் வாழ்வோம்.
-PothigaiPriya
https://www.facebook.com/groups/siddhar.science


No comments:

Post a Comment